** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday 11 December 2014

முக்கோண அரசியலில் அடிமாட்டு விலைக்கு செல்லும் பெட்ரோல்
பெட்ரோல் விலை ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைந்து கொண்டே செல்கிறது. இது போக, கடந்த சனியன்று பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) கச்சா எண்ணெய் உற்பத்தியை தொடர்வோம் என்றும் அறிவித்துள்ளது.
இப்படீயே போனால் பேரலுக்கு 40 டாலர் என்ற அளவில் சென்றால் கூட ஆச்சர்யமில்லை என்றும் கருதப்படுகிறது.
இந்த குறைவிற்கு தேவை குறைந்து உற்பத்தி கூடியது என்பதை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. பின்புலத்தில் சர்வதேச அளவில் நடக்கும் அரசியலே முழுக்காரணம். இதனால் இந்த செயற்கையான குறைவுகள் எப்பொழுதும் திடீர் உயர்வை சந்திக்கலாம்.
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் நடந்த பனிப்போர்கள் அனைவரும் அறிந்ததே. சோவியத் ரஷ்யாவின் உடைவிற்கு பிறகு அடங்கிக் கிடந்த பனிப்போர் தற்போது மீண்டும் புகைய ஆரம்பிதுள்ளது.
நன்கு வலுப்பெற்று வரும் ரஷ்யாவின் வளர்ச்சியை தடுப்பதற்கான அமெரிக்காவின் உத்தியே இந்த கச்சா எண்ணெய் உயர்வாக தெரிகிறது.
அண்மையில் உக்ரைனின் ஒரு மாகாணத்தை ரஷ்யா பிடித்த பிறகு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சேர்ந்து ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்தன. ஆனால் அந்த தடை ஒன்றும் ரஷ்யாவை பெரிதாக பாதிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்களிடம் இருக்கும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் தான். இதனை வைத்து பொருளாதார தடையை எளிதாகவே சந்தித்து வந்தார்கள்.
இதனைப் பார்த்து எரிச்சலூற்ற மேற்கு நாடுகள் மன்னர் பிடியில் இருக்கும் அரபு நாடுகளை மிரட்டி தேவைக்கு மிச்சமாகவே கச்சா எண்ணெய் உற்பத்தி வரும்படி செய்து உள்ளார்கள். இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் கணிசமாக குறைந்து வருகிறது.
இப்படி விலை குறைவதை அரபு நாடுகளால் எளிது சமாளித்து விட முடியும். ஏனென்றால் ரஷ்யாவை ஒப்பிடும் போது வளைகுடா நாடுகளில் உற்பத்தி செலவு என்பது மிகக் குறைவே.ஆனால் ரஷ்யாவிற்கு ஒரு கட்டத்திற்கு கீழே செல்லும் போது விலை குறைவை சமாளிக்க முடியாது. ரஷ்யாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செலவு என்பது கொஞ்சம் அதிகம்.
இதன் காரணமாக ரஷ்யா தனது கம்யூனிச பார்ட்னரான சீனாவுடன் 400 பில்லியன் டாலர் அளவிற்கு ஒரு மிகப்பெரிய ஒப்பந்தத்தை போட்டு உள்ளது. இதனை வைத்து ரஷ்யா சமாளிக்க பார்க்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த முப்பது வருடங்களுக்கு சீனாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை சப்ளை செய்ய முடியும்.
அதே சமயத்தில் சீனாவின் பொருளாதாரம் கீழ் நோக்கி செல்வது கச்சா எண்ணெய் தேவையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது.
இப்படி ஒரு முக்கோண அரசியலில் தான் பெட்ரோல் விலை குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால் இந்தக் குறைவு என்பது நிரந்தரமானதல்ல. எந்த சமயத்திலும் செயற்கையான சில செயல்களால் மேலே வந்து விடும். இதனால் எண்ணெய் பங்குகளில் கவனத்துடன் முன் செல்வது நல்லது..